
கோலாலாம்பூர், ஜூன்-15-மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP-யின் அடுத்தகட்ட அரசியல் திசை மற்றும் கூட்டணி குறித்த முடிவுகள், விரைவில் நடைபெறவுள்ள பெரிக்காத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகே அதிகாரப்பூர்வமாகத் தீர்மானிக்கப்படும்.
நீலாய் ஸ்பிரிங்ஸ் ரிசோர்ட் ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதீஸ் குமார் நீலமேகம் அவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில், இந்தியச் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைகளைத் தொடர கட்சியின் தலைவருக்கு மத்திய செயற்குழு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களுக்கான தேர்தல் இயந்திரம் முழுமையாக முடுக்கப்பட்டு, அடிமட்ட மக்களை நோக்கிய பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ‘MIPP Goes Global’ என்ற புதிய திட்டத்தின் கீழ், உலகின் 20 நாடுகளில் உள்ள 60 நகரங்களில் கட்சியின் அனைத்துலகக் குழுவை அமைத்து, வெளிநாட்டு வாழ் மலேசிய இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது என சதீஸ் சொன்னார்.
பெரிக்காத்தானுக்கு வெளியிலுள்ள கூட்டணிகளில் சேருவதற்கு MIPP-க்கு அழைப்புக் கிடைத்திருப்பதாகவும், ஆனால் பெரிக்காத்தானிலேயே நீடிக்குமாறு PN தலைமைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், MIPP தலைவர் பி.புனிதன் கடந்த வாரம் கூறியிருந்தார்.



