
கோத்தா கினாபாலு, ஜூன்-15 – மலேசிய நாட்டின் ஒற்றுமை மற்றும் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட மாபெரும் தலைவர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு முக்கிய வரலாற்றுத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
மலேசிய தேசிய ஆவணக்காப்பகத்தின் ஏற்பாட்டில், மறைந்த பெருந்தலைவர் துன் முஹமட் ஃபுவாட் ஸ்டீஃபன்ஸ் (Tun Mohd Fuad Stephens) அவர்களின் நினைவாக, ‘தேசிய கட்டமைப்பில் பெருந்தலைவர்’ என்ற தலைப்பிலான சிறப்புத் திட்டம் சபா, கோத்தா கினபாலுவில் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வை, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மலேசிய உருவாக்கத்தின் முக்கிய சிற்பியாகக் கருதப்படும் துன் ஃபுவாட் ஸ்டீஃபன்ஸ், சபா மாநிலத்தை தீபகற்ப மலேசியா மற்றும் சரவாக்குடன் இணைத்த ஒரு பலமான ஒற்றுமைப் பாலமாகத் திகழ்ந்தார் என அமைச்சர் புகழாரம் சூட்டினார்.
‘Huguan Siou’ அல்லது ‘உயர்ந்த தலைவர்’ என்ற அவரது வரலாற்றுப் பட்டம், இனம் மற்றும் மதங்களைக் கடந்து நேர்மையுடனும் துணிச்சலுடனும் அவர் ஆற்றிய தலைமைத்துவத்திற்குச் சான்றாகும்.
இந்நிலையில், கோலாலம்பூர், ஜாலான் டத்தோ ஓன்னில் அமைந்துள்ள Memorial Negarawan நினைவகத்து நேரில் சென்று பொது மக்கள் இம்மாபெரும் தலைவரின் வரலாற்றுத் தியாகங்களை அறிந்து கொள்ளுமாறு டத்தோ ஏரன் அழைப்பு விடுத்துள்ளார்.



