
பந்திங், ஜூலை-6-சிலாங்கூர் பந்திங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று காலை மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து முன்னாள் மாணவி எனக் கூறப்படும் சந்தேக நபரை போலீஸார் கைதுச் செய்து, தாக்குதலுக்கானக் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனை உறுதிப்படுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar, நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பெற்றோர்களும் பொது மக்களும் கவலைக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யூகங்களைக் கிளப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக காலை 9.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களில், கருப்பு உடையணிந்த பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்துடன் பள்ளி வளாகத்தில் நடமாடியதைத் தொடர்ந்து, மாணவர்கள் அச்சத்தில் ஓடிச் சென்றதும், ஆசிரியர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றதும் பதிவாகியுள்ளது.



