
சிரம்பான், ஜூலை-24-நெகிரி செம்பிலான், Ampangan, Dusun Setia பகுதியில் அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றியதாக நம்பப்படும் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் கட்சிக் கொடிகள் பல அகற்றப்பட்டது குறித்து இன்று அதிகாலை சிரம்பான் மாவட்டக் காவல் துறை தலைமையகத்திற்கு புகார் வந்ததாக மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.
அச்சம்பவத்தை பொதுமக்களில் ஒருவர் பதிவு செய்து, பின்னர் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிகளை ஒருவர் அகற்றும் காட்சிகள் அந்தக் காணொளியில் இருந்தன.
அதன் தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவல் மற்றும் விசாரணையின் அடிப்படையில், 70 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு முதியவர் ஒருவரைக் காவல் துறை கைது செய்ததாக Alzafny விவரித்தார். மேல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றாரவர்.
இதனிடையே, ஆரூடங்களை வெளியிடுவது, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது, குழப்பத்தை ஏற்படுத்தி விசாரணையைப் பாதிக்கக்கூடிய வகையிலான உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு Alzafny அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
மற்றொரு நிலவரத்தில், தேர்தல் குற்றங்கள் தொடர்பில் நேற்று இரு புகார்கள் பெறப்பட்டு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற நிலையில், தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து இதுவரை 14 காவல் துறை புகார்கள் செய்யப்பட்டுள்ளன.



