போர்டிக்சனில் தூங்கிய நாய்க்குட்டியை 2 முறை கார் ஏற்றி கொன்ற ஓட்டுநர்: தீவிர விசாரணைக்கு வழக்கறிஞர்கள் அமைப்பு வலியுறுத்தல்

போர்டிக்சன், ஆகஸ்ட்-9 – நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் தூங்கிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை 2 முறை காரை ஏற்றி கொன்ற ஓட்டுநர் மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என ‘விலங்குகள் உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு’ (Lawyers for Animal Rights) கோரிக்கை விடுத்துள்ளது.
லுக்குட் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, Mitsubishi Triton இரக பிக்கப் டிரக் ஓட்டுநர் ஒருவர், சாலையில் தூங்கிக்கொண்டிருந்த நாய்க்குட்டியின் மீது காரை ஏற்றியுள்ளார்.
பின்னர், காரைப் பின்னோக்கி எடுத்து மீண்டும் அதே நாய்க்குட்டியின் மீது ஏற்றி, அதைக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
”இது கவனக்குறைவால் நடந்த விபத்து அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரம்” என சுட்டிக் காட்டிய வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், இதை வெறும் குற்றவியல் சட்டத்தின் கீழ் சாதாரண வழக்காகப் பதிவுச் செய்யாமல், 2015-ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
CCTVகாட்சிகள் மற்றும் தடயங்களை விரைவாகச் சேகரித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநரைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



