
கிள்ளான், ஆகஸ்ட் 17 – கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் (HYO Port Klang) ஏற்பாட்டில் 37ஆவது தமிழ் விழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 43 ஆண்டுகளாக இந்திய சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் இவ்வமைப்பு, இவ்வாண்டு தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டை முன்னிறுத்தும் வகையில் 8 சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சிகளில் சுமார் 4,500 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பேச்சு, இசை, நடனம், மேடை நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதுடன், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.
தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் நுண்கலைக் கோயில் (Temple of Fine Arts) சார்ந்த கலைநிகழ்ச்சிகள், நடனம், இசை மற்றும் மேடை நாடகம் ஆகியவை இடம்பெற்றன. மேலும், மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடமும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தமிழ்மொழி, கலை மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கு மக்கள் தங்களது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.



