
பாங்காக், ஆகஸ்ட்-19-தாய்லாந்து, பாங்காக்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற Hyrox நிகழ்வின் போது தாய்லாந்தைச் சேர்ந்த உடற்பயிற்சிப் பயிற்சியாளர் ஒருவர் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து உயிரிழந்தார். Queen Circut தேசிய மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அந்நிகழ்வின் போது மயங்கி விழுந்த 41 வயதான தென்னாப்பிரிக்கரான Leroy Saundersச்சுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக Bangkok Post செய்தி வெளியிட்டுள்ளது.
Saundersசின் மரணத்திற்கு என்ன காரணம் உள்ளிட்ட பல விஷயங்கள் முழுமையாகத் தெரியவில்லை. அனைத்தும் தெளிவாகத் தெரியும் வரை Hyrox போன்ற அதிகாரப்பூர்வ அமைப்புகளும் ஊடகங்களும் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Saunders கடைசி நொடி வரை நல்ல நிலையிலேயே இருந்தார் என்றும் உடற்பயிற்சியில் ஈடுபட ஆயிரக்கணக்கானோரை ஊக்குவித்து வந்தார் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Saunders, பாங்காக்கில் IAOT CrossFit மையத்தை நடத்தி வந்தார். அவர் விளையாட்டு வீரர்களுக்கான உடற்பயிற்சிகளையும் அளித்து வந்தார் எனக் கூறப்படுகிறது.
ஓட்டத்தையும் உடற்பயிற்சிகளையும் உள்ளடக்கிய Hyrox என்பது உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற, மிகவும் பிரபலமான ஒரு பந்தயமாகும். அது ஆரோக்கியமான, நன்கு தயாரானவர்களுக்கு இயல்பாக ஆபத்தானது அல்ல. எனினும் கனமான பொருட்களைத் தூக்குவதும் தொடர்ச்சியாக ஓடுவதும், இதய நோய்கள் இருப்பவர்களுக்கும் அல்லது தங்களை அளவுக்கு அதிகமாக வருத்திக் கொள்பவர்களுக்கும் ஆபத்தான இதயத் துடிப்புகளையோ அல்லது மாரடைப்பையோ ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



