
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-17-1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் AUKU இரத்துச் செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை, பி.கே.ஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி வரவேற்றுள்ளார்.
உயர் கல்வித்துறையின் சீர்திருத்தப் பாதையில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என அவர் வருணித்தார்.
5 தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வது, _campus_ வளாக சுயாட்சியை மீட்டெடுக்கவும் மாணவர்களை மேம்படுத்தவும் இன்றியமையாதது என்றார் அவர்.
2018-ல் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தபோது, AUKU-வின் பிரிவு 15(2)(c)-ஐ நீக்கி மாணவர்களின் அரசியல் பங்கேற்புக்கு வழிவகுத்ததையும், 2024-ல் நிதி சுயாட்சியை மேம்படுத்த திருத்தங்களைச் செய்ததையும் சுட்டிக்காட்டிய சிவமலர், இத்தகைய சிறு திருத்தங்கள் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது என்றார்.
மாணவர்கள் அச்சமின்றி விமர்சிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் பல்கலைக்கழகங்கள் ஒரு சுதந்திரமான தளமாக விளங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படுவதோடு நின்றுவிடாமல், கல்வி சுதந்திரம், பல்கலைக்கழக சுயாட்சி, மாணவர் உரிமைகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதிச் செய்யும் வகையில் ஒரு விரிவான புதிய சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் சிவமலர் கேட்டுக்கொண்டார்.



