
குவாந்தான், ஆகஸ்ட்-17- Bentong, Genting Highlandsசில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சமூக ஊடகங்களில் பரவியுள்ள தகவலை பகாங் மாநில காவல் துறை மறுத்திருக்கிறது.
அச்செய்தி உண்மையில்லை எனக் கூறிய பகாங் மாநிலக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் Datuk Azry Akmar Ayob, புகார் பெறப்பட்டவுடன் விசாரணை நடத்தப்படுவது வழக்கம் எனக் கூறினார். Genting Highlands அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும், சட்டவிரோதச் செயல் தொடர்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டால், விசாரணையைத் தொடங்கி நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
பகாங் மாநிலக் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் தலைவருக்கான பொறுப்பு ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு Azry Akmar செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.
அவ்விழாவில் இதற்கு முன் புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய மூத்த உதவி ஆணையர் Ahmad Sukarno Mohd Zahar, பஹாங் மாநில குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் Datuk Mohamad Noor Yusof Aliயின் இடத்தை நிரப்புகிறார்.



