
கோத்தா டாமான்சாரா, செப்- 18 —சமூகப் பாதுகாப்புச் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் நெருக்கமாகக் கொண்டுச் செல்லும் நோக்கில், மனிதவள அமைச்சான KESUMA-வின் ‘மக்களுடன் KESUMA’ (KESUMA Bersama Rakyat) திட்டத்தை முன்னிறுத்தும் iLINDUNGu மெகா திருவிழா இன்று கோத்தா டாமான்சாராவில் உள்ள Strand Mallலில் மிக பிரமாண்ட தொடக்கம் கண்டது.
இந்நிகழ்வு செப்டம்பர் 20ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
சுமார் 60,000 பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கிலான இவ்விழாவில், சமூகப் பாதுகாப்புச் சேவைகள், ஆலோசனைகள், குடும்பத்தினருக்கான நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் ஆகியவைகள் இடம் பெறுகின்றன.
KESUMA-வின் கீழ் உள்ள MITRA உள்ளிட்ட 11 நிறுவனங்கள் இதில் பங்கேற்பதால், பொதுமக்கள் பல்வேறு அரசுச் சேவைகள் மற்றும் தகவல்களை ஒரே இடத்தில் பெற முடியும்.
மேலும், ‘LINDUNG Kendiri’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 60-க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பான விற்பனையாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இலவச சுகாதாரப் பரிசோதனை, ஹெல்மெட் விநியோகம், பங்களிப்புச் சரிபார்ப்பு, நலத்திட்ட ஆலோசனை மற்றும் பதிவு சேவைகள் உள்ளிட்ட PERKESO சேவைகளும் வழங்கப்படுகின்றன.
அதேவேளையில், தாமதமான பங்களிப்புத் தொகைக்கு முதலாளிகளுக்கு 80 விழுக்காடு வரையிலான தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.
வேலை தேடுபவர்களுக்காக MYFutureJobs ஏற்பாடு செய்துள்ள ‘LINDUNG Kerjaya Carnival’-இல் 25 முதலாளிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதனுடன், Zumba போட்டி, குழந்தைகளுக்கான ‘Dream Job’ ஆடை அலங்காரப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி, ‘Talent Scout’ மற்றும் ‘Dapur i LINDUNGu’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இவ்விழாவை மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தொடக்கி வைக்கவுள்ள நிலையில், PERKESO-வின் புதிய சின்னத்தையும் அறிமுகப்படுத்தவிருக்கிறார்.



