JDT-யின் வரலாற்று மலேசியக் கிண்ண வெற்றி; திங்கட்கிழமை ஜோகூரில் பொது விடுமுறை

ஜோகூர் பாரு, மே-24,
மலேசியக் கிண்ணக் கால்பந்து போட்டியில் JDT எனப்படும் ஜோகூர் டாருல் தக்சிம் அணி வரலாற்றுச் சாதனை படைத்ததை ஒட்டி, நாளை திங்கட்கிழமையன்று ஜோகூர் மாநிலத்திற்குச் சிறப்புப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் ஜாலிலில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் JDT 2-0 என Kuching City FC-யைத் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது.
இதன் மூலம், தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தைக் கைப்பற்றி, இச்சாதனையை நிகழ்த்திய முதல் மற்றும் ஒரே கால்பந்து கிளப் என்ற வரலாற்றை JDT படைத்துள்ளது.
இதையடுத்து, இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் ஒப்புதலோடு இந்த சம்பவ விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி அறிவித்தார்.
இந்த வெற்றி ஜோகூர் மக்களுக்கும் இரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ‘பரிசு’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



