கோலாலம்பூர், நவ 30 – காஜாங் வழிதடத்திற்கான சேவையில் ஈடுபட்ட MRT ரயில் ஒன்றில் நேற்றிரவு வெடிப்பு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை ரெப்பிட் கே.எல் (Rapid KL) நிறுவனம் மறுத்துள்ளது.
28 ஆவது எண் கொண்ட அந்த MRT ரயிலின் இயந்திரத்திலிருந்து வெளியேறி சத்தம் அதுவாகும். இதற்கு முன்னதாக தாமான் முத்தியாரா MRT நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தின் மின்சக்தியை வழங்கும் முறையில் எச்சரிக்கை ஓசை வெளியானதை தொடர்ந்து தாமான் முத்தியாரா வழித்தட சேவையிலிருந்து அந்த ரயில் வெளியேற்றப்பட்டதாக ரெப்பிட் கே.எல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அது MRT ரயில் இயந்திரத்தின் பொறியிலிருந்து வெளியேறிய சத்தமே தவிர அந்த ரயிலில் வெடிப்பு அல்லது தீ எதுவும் ஏற்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த MRT ரயில் சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது. அதிலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் அதன் பிறகு தாமான் முத்தியாரா ரயில் நிலையம் வந்த மற்றொரு MRT ரயிலில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். MRT சேவை நேரம் முடிந்தபின் அந்த ரயில் தீவிர கண்காணிப்பிற்காக பரிசோதிக்கும் மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ரெப்பிட் கே.எல் தெரிவித்துள்ளது.