
கோலாலம்பூர், செப் -24,
Linkedua நெடுஞ்சாலையின் 1.7 ஆவது கிலோமீட்டரில் இன்று விடியற்காலை 6.30 மணியளவில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் மரணம் அடைந்த வேளையில் மேலும் இருவர் காயம் அடைந்தனர். அந்த நான்கு மோட்டார் சைக்கிளோட்டிகளும் சிங்கப்பூர் செல்வதற்காக வலது பக்க சாலைக்கு திரும்பியபோது அவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானதாக Iskandar Puteri மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் M. குமரேசன் தெரிவித்தார்.
அந்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் சாலையின் ஒரு பகுதியில் மோதிக்கொண்டதில் இருவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர். காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இன்று வெளியிட்ட அறிக்கையில் குமரேசன் குறிப்பிட்டார். மரணம் அடைந்தவர்களில் 30 வயதுடைய முதலாவது நபர் தலையில் கடுமையாக காயம் அடைந்ததோடு , மரணம் அடைந்த இரண்டாவது நபரான 31வயதுடைய ஆடவர் தலையில் காயம் அடைந்ததோடு வலது கையும் முறிந்தது. இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என குமரேசன் தெரிவித்தார்.