
புத்ராஜெயா, மே-10- MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக தான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடருகிறார்.
அவரின் சேவை ஒப்பந்தம் மே 13 தொடங்கி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
ஊழல் துடைத் தொழிப்பில் அசாம் பாக்கியின் அனுபவம், கடப்பாடு, அடைவுநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஷம்சுல் கூறினார்.
தான் ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக இருந்த போது, லத்தீஃபா கோயாவுக்கு பதிலாக 2020 மார்ச் 9-ல் அசாம் பாக்கி முதன் முறையாக MACC தலைவரானார்.
பிறகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரான போதும் அப்பொறுப்பில் தொடர்ந்த 62 வயது அசாம் பாக்கியின் சேவை, இதற்கு முன் 2 முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.