
கோலாலம்பூர், ஜூன்-20 – மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகமான MDEC, புதியத் தலைவரைப் பெற்றுள்ளது.
பிரபல தொழில்நுட்பத் தொழிலதிபர் கணேஷ் குமார் பங்கா, அதன் புதிய பகுதிநேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
MOL Global நிறுவனத்தின் நிறுவனரான கணேஷ் குமார், தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவம் கொண்டவர்.
கடந்தாண்டு முதல் MDEC நிர்வாக வாரிய உறுப்பினராகப் பணியாற்றி வரும் இவர், முன்னதாக மலேசியத் தேசியத் தொழில்நுட்பச் சங்கத்தின் (PIKOM) தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நியமனம் குறித்துப் பேசிய டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்த MDEC நிறுவனத்திற்குத் துறை சார்ந்த ஆழமான அனுபவம் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், கணேஷ் குமாரின் வருகை, உள்ளூர் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் மற்றும் சிறு, நடுத்தரத் தொழில்துறையினரின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்ய உதவும் என, MDEC தலைமை நிர்வாக அதிகாரி அனுவார் ஃபாரிஸ் ஃபாட்சில் கூறினார்.
மலேசியாவின் அடுத்தகட்ட டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, அரசாங்கத்தின் கொள்கைகளையும் தொழில்துறை யுக்திகளையும் இணைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.



