
ஷா ஆலாம், மார்ச்-2-அண்மையில் வைரலான கேபிள் திருட்டு சம்பவம் தொடர்பில், 3 பெண்கள் உட்பட 9 பேர் கைதாகியுள்ளனர்.
கடும் குற்றவாளிகள் என நம்பப்படும் அவர்கள், பிப்ரவரி 23 மற்றும் 26-ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட Op Kabel Viral சிறப்பு சோதனை நடவடிக்கையில் கைதுச் செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் டெங்கில், கெடா சுங்கை பட்டாணி, பேராக் ஈப்போ உள்ளிட்ட இடங்களில் கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் 19 முதல் 44 வயதிலான அந்த 9 பேரும் கைதாகினர்.
அவர்களிடமிருந்து 12 கேபிள் கம்பிகள், கேபிள்களை வெட்ட பயன்படுத்தும் கருவி உள்ளிட்டவைக் கைப்பற்றப்பட்டன.
தவிர, BMW கார், Nissan Navara, லாரி உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வேளை, சுமார் RM60,000 மதிப்பிலான பரிவர்த்தனை ஆவணங்களும் வங்கி இரசீதுகளும் கைப்பற்றப்பட்டதாக Shazeli சொன்னார்.
யாருக்கு சந்தேகம் வராமலிருக்க, Ves மேலங்கி, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை, beacon விளக்கு, பாதுகாப்பு ஹெல்மட் என சகல உபகரணங்களையும் பயன்படுத்தி அவர்கள் ஆள்மாறாட்டம் செய்கின்றனர்.
கேபிள் திருட்டு தவிர்த்து, கொள்ளை, போதைப்பொருள் விநியோகம் போன்ற குற்றச்செயல்களில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
9 பேரில் 7 பேர் போதைப்பொருள் சோதனையில் தோல்வி கண்டனர்.
இந்நிலையில், இன்னமும் வெளியில் இருக்கும் 29 முதல் 42 வயதிலான மேலும் 3 சந்தேக நபர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.



