
புத்ராஜெயா, மே 6 – ஆடை விற்பனை நிறுவனமான Padini Holdings Bhd மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பல வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள விவகாரத்தில், விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC எட்டு பேரை கைது செய்துள்ளது.
MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறுகையில், இதுவரை 10 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 15 பேர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, தொடர்புடைய தரப்புகள் கணக்குகளை விடுவிக்க கோரிக்கை விடுத்திருந்தாலும், நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டே இருக்கும் என MACC தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 28, Padini Holdings மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்களுக்கு சொந்தமான மொத்தம் 21 வங்கி கணக்குகள் MACC மூலம் முடக்கப்பட்டன.
இந்த கணக்குகள், பணமோசடி, பயங்கரவாத நிதியம்சம் மற்றும் சட்டவிரோத செயல்களில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் தொடர்பான சட்டம் 2001 (AMLA) பிரிவு 44(1) கீழ் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் புர்சா மலேசியாவிற்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனம், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும், முடக்கப்பட்ட கணக்குகள் தினசரி வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாதவை என்றும் கூறியுள்ளது.



