
கோலாலம்பூர், மார்ச்-12 – பேராக் தஞ்சோங் மாலிம், தான் ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி, ஓர் அறிவு ஜீவி மாணவனால் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
மாணவர் அகிலன் இளங்குமரனுக்கு, Pusat Genius @ Permata Pintar Negara எனும் மிகச் சிறந்த அறிவாற்றலைப் பெற்ற மாணவர்களுக்கான கல்வி மையத்தில் பயில இடம் கிடைத்துள்ளதே அதற்குக் காரணம்.
மலேசியா முழுவதும் 500,000 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், கடைசியில் 50 மாணவர்களுக்கு மட்டுமே இவ்வரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்ற ஒரேயொரு தமிழ்ப்பள்ளி மாணவர் அகிலன் இளங்குமரன் என்பதால், இப்பள்ளியின் ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.
அகிலன் இடைநிலைப்பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய அவசியமின்றி, UKM எனப்படும் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் PERMATA PINTAR கல்வி மையத்தில் நேரடியாக தனது கல்வியை மேற்கொள்ள முடியும்.
அகிலன் எந்தப் போட்டிக்குச் சென்றாலும் பொதுவாகப் பரிசை வெல்லாமல் வர மாட்டார் என அம்மாணவரின் சிறப்புகளை ஒரே வார்த்தையில் புகழ்ந்தார் பள்ளித் தலைமையாசிரியர் முருகேசு அத்தியப்பன்.
உலக ரீதியில் நடத்தப்பட்ட குவின்ஸ் கோமன்வெல்த் கட்டுரை (QUEEN’S COMMENWEALTH ESSAY COMPETITION) எழுதும் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கே அகிலன் பெருமை சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கப்பெறாது என்று எண்ணும் சிலருக்கு இவரின் சாதனையானது சிறந்த வகையில் பதிலளித்துள்ளதாக முருகேசு பெருமிதம் தெரிவித்தார்.