![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/kl27-26062024-ntw_4302139_20240627173604.jpg)
கோலாலம்பூர், ஜூன்-27 – OTEP என்றழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளின் திறன்களை உயர்த்தும் திட்டத்தைத் தொடருவதற்கு, மனிதவள அமைச்சு (KESUMA) இவ்வாண்டு 20 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்குகிறது.
அமைச்சர் ஸ்டீவன் சிம் ( Stevan Sim ) அதனைத் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் குறித்த புரிதலை மேம்படுத்துவதோடு, எந்தவொரு தரப்பினரும் அரசாங்க அனுகூலங்களில் இருந்து விடுபடாதிருப்பதை உறுதிச் செய்யும் வகையில், அமைச்சின் கீழுள்ள HRD Corp நிறுவனத்தின் மூலம் அத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
30 மாற்றுத்திறனாளிகளுடன் கடந்தாண்டு முன்னோடித் திட்டமாக இந்த OTEP தொடங்கப்பட்டது; அவர்களில் 15 பேர் தத்தம் திறன்களை வளர்த்துக் கொண்டு வெற்றிகரமாக வேலையில் சேர்ந்திருக்கின்றனர்.
அவர்களின் குறைபாடுகளுக்கு உகந்த திறன் தேர்ச்சிப் பயிற்சிகளை வழங்கி, ஏற்ற வேலை வாய்ப்புகளைப் பெற வகைச் செய்வதே அத்திட்டத்தின் தலையாய நோக்கம் என ஸ்டீவன் சிம் சொன்னார்.
இந்தக் கூடுதல் நிதியைக் கொண்டு அவர்களிடம் மறைந்துக் கிடக்கும் திறன்களையும், அறிவாற்றலையும் மேம்படுத்திக் கொள்ள மேலும் வாய்ப்பு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டும் சமூகத்தை உருவாக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வரும் ஆண்டில், நரம்பியல் பன்முகத்தன்மைக் (neurodiversity) கொண்டவர்கள் உள்ளிட்ட மேலும் ஏராளமான மாற்றுத்திறனாளிகளை இந்த OTEP திட்டத்தில் பங்கேற்க வைக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் முன்னதாக நரம்பியல் பன்முகத்தன்மை சேர்க்கையின் தாக்கம் மீதான திட்டம் என்ற நிகழ்வில் உரையாற்றினார்.
அதில் சிறப்பு பிரமுகராக ஜொகூர் இளவரசியார் துங்கு துன் அமீனா சுல்தான் இப்ராஹிம் (Tunku Tun Aminah Sultan Ibrahim) கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.