
கோலாலம்பூர், ஜூன்-29 – நாட்டில் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் இந்தியக் கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றான Koperasi Didik Berhad நேற்று அதன் 28-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தை நடத்தியது.
கோலாலம்பூர் ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தை, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
கழக உறுப்பினர்களும் நிர்வாகத்தினரும் ஒன்றுகூடி, கூட்டுறவு நிறுவனத்தின் செயல்திறனை மதிப்பாய்வு செய்து எதிர்காலத்திற்கான யுத்திகளை வகுக்கும் களமாக இக்கூட்டம் அமைந்தது.
மறைந்த துன் சாமி வேலு காலத்தைப் போல் பெருந்திரளானோர் கூட்டத்துக்கு வந்திருந்ததை, டத்தோ ஸ்ரீ சரவணன் தமதுரையில் பாராட்டினார்.
TAFE கல்லூரி, MIED, AIMST மற்றும் KPJ Healthcare-ரின் YASI திட்டம் உள்ளிட்ட பல்வேறு MIC-ஆதரவு முயற்சிகளின் வெற்றியையும் அவர் பாராட்டினார்.
Koperasi Didik Berhad தற்போது 8 மில்லியன் ரிங்கிட் வைப்புத் தொகையை வைத்திருப்பதாக, உறுப்பினர்களின் பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் சரவணன் அறிவித்தார்.
அதே சமயம், அக்கூட்டுறவு கழகத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன;
இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் இலாபகரமான முதலீட்டிற்கான Koperasi Didik-கின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சரவணனின் உரையைத் தொடர்ந்து, Koperasi Didik நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு விரிவான கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது.
கூட்டுறவு கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திசையின் பல்வேறு அம்சங்களை விவாதங்கள் உள்ளடக்கியிருந்தன.