
புத்ராஜெயா, ஜூன்-19 – பெண்கள் உரிமைப் போராட்ட அமைப்பான SIS எனப்படும் Sisters in Islam-முக்கு எதிரான 2014 ஃபத்வா உத்தரவை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இஸ்லாமிய சமய போதனையிலிருந்து SIS விலகியுள்ளதாகக் கூறி 11 ஆண்டுகளுக்கு முன் அந்த ஃபத்வா சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தால் வெளியிடப்பட்டதாகும்.
அதனை எதிர்த்து அந்த அரசு சாரா அமைப்பு இத்தனை ஆண்டு காலமும் சட்டப் போராட்டம் நடத்தி வந்தது.
2019 முதல் 2023 வரை பல்வேறு கீழ் நிலை நீதிமன்றங்களில் SIS-சின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையில் இன்று கூடிய நீதிபதி குழு பெரும்பான்மை முடிவு அடிப்படையில், அந்த ஃபத்வா உத்தரவை தள்ளுபடி செய்தது.
‘இஸ்லாத்தை விட்டு விலகியது’ என்ற சொல்லை மனிதர்களை மட்டுமே குறிக்க முடியும்; SIS போன்ற அமைப்புகளின் மீது அதனைத் திணிக்க முடியாது.
எனவே, இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியம் என்பதை உணர்ந்து , SIS மீதான ஃபத்வாவை தள்ளுபடி செய்வதாக தெங்கு மைமுன் தனது தீர்ப்பில் கூறினார்.
இவ்விஷயத்தில், இறையியல் அம்சங்கள் அல்லது மதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நீதியமன்றம் முடிவுச் செய்யவில்லை;
மாறாக, அதிகார வரம்பின் சட்ட வரம்புகளை மட்டுமே உட்படுத்தி முடிவுச் செய்ததாக அவர் சொன்னார்.