
கோலாலம்பூர், மே 29 – பிரபல கல்வியாளரும் , இந்திய சமூக நலன் விவகாரங்களில் கவனம் செலுத்தி வந்தவருமான பேராசிரியர்
KS நாதன் காலமானார். பலருக்கு சூசை என்று அறிமுகமான பேராசிரியர் நாதன் நேற்று காலையில் தனது 79 ஆவது வயதில் இறந்தார். நாட்டில் மலேசிய கல்வியாளர் சமூகம் மற்றும் இந்திய சமூகத்தில் அவரது மறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக உரிமை கட்சியின் தலைவரும் பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சருமான பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றிவந்த சூசை அனைத்துலக நட்புறவு விவகாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளார். ஒய்வு பெற்ற பிறகும்கூட சிங்கப்பூரிலுள்ள தென்கிழக்காசிய கல்வி மைய கழகத்தில் மூத்த ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் அவர் குத்தகை அடிப்படையில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். கல்வி மற்றும் ஆய்வுத்துறையில் சூசை ஆற்றிய பங்கிற்காக அவர் பெரிதும் மதிக்கப்பட்டு வந்துள்ளார். கல்வித்துறையில் மட்டுமின்றி மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தை பாதிக்கக்கூடிய விவகாரங்களிலும் அவர் தனது கவலையையும் கருத்துக்களையும் தம்மிடம் வெளியிட்டு வந்ததோடு , கல்வித்துறையில் ஓர் அடையாளமாக திகழ்ந்துவந்த அவரது மறைவு பெரும் இழப்பாகும் என ராமசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.