
புத்ராஜெயா, நவம்பர்-25 – 2025 SPM கேள்வித் தாட்கள் கசிந்து சமூக ஊடகங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.
அது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை; என்றாலும், பரவி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சு அறிந்திருப்பதாக கல்வி இயக்குநர் ஜெனரல் Dr முகமட் அசாம் அஹ்மாட் தெரிவித்தார்.
“இவ்விவகாரம் தேர்வு வாரிய இயக்குநரின் கைகளில் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைக் கையாள்வதற்கான நடைமுறைகள் அவர்களிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன்” என்றார் அவர்.
இப்போதைக்கு, SPM கேள்விகள் இன்னும் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் சொன்னார்.
முன்னதாக, கசிந்ததாகக் கூறப்படும் SPM கேள்விகளை வழங்கும் தரப்பினரின் screenshot-டுகள் வைரலாகின.
ஒரு பாடத்திற்கு RM499 வரையிலான விலையில் அவை விற்கப்பட்டது அம்பலமானது.



