
ஷா ஆலம், மே 5- ஷா ஆலாமிலுள்ள தங்கக் கடையொன்றில், பல நகைகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினர், கடந்த வெள்ளிக்கிழமை புன்சாக் ஆலமில் கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில், அவ்விரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
மேலும், இச்சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துணிகள் மற்றும் திருடப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார். அவர்கள் களவாடிய நகைகளில் சில குத்தகைக்கு விடப்பட்டதாகவும், சில விற்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. அவைகளையும் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
தொடர்ந்து, 25 மற்றும் 23 வயதுடைய அந்தத் தம்பதிகள், வேலையில்லாதவர்கள் எனவும், எந்த குற்றப் பதிவையும் இதற்கு முன்பு கொண்டிருக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்தாலும் இச்சம்பவம் குறித்த விசாரணை மேலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.