
கோலாலாம்பூர், ஜனவரி-9 – மலேசியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் இந்த 2026-ஆம் ஆண்டிலும் சராசரியாக 5 விழுக்காடு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டின் நிலை இவ்வாண்டும் நீடிக்குமென, Mercer Malaysia ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
திறமையானப் பணியாளர்களை ஈர்ப்பதில் நிறுவனங்களுக்குள் நிலவும் கடுமையான போட்டி, அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் அனுபவமுள்ள ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளும் தேவைகள் ஆகியவை இந்த உயர்வுக்கு காரணமாகும்.
தொழில்நுட்பம், நிதி மற்றும் தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகளவில் சம்பள உயர்வைப் பெறுவார்கள் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆசிய பசிஃபிக் வட்டாரத்தின் போக்குடன் இது ஒத்துப்போகிறது; அங்கும் சம்பள உயர்வு 4 முதல் 6 விழுக்காடு வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது ஊழியர்களுக்கு நிம்மதி அளித்தாலும், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்கள் வாங்கும் சக்தியைக் குறைக்கக்கூடும் என்ற கவலையும் எழவே செய்கிறது.
அதே சமயம், உள்ளூர் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் சம்பளப் பேக்கேஜ்களுடன் போட்டியிட சிரமப்படலாம்.
என்றாலும், மலேசியாவின் பணியாளர்கள் இவ்வாண்டில் வலுவான சம்பள வளர்ச்சியால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



