
கோலாலம்பூர், செப்டம்பர்-29 – ஜோகூர், குழுவாங் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றிப் பெற்றிருப்பது, ஒற்றுமை அரசாங்கம் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பதை உணர்த்தியிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவோம் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
அப்படியொரு மகத்தான வெற்றியை ஆளுங்கட்சி கூட்டணிக்கு மக்கோத்தா வாக்காளர்கள் வழங்கியுள்ளனர்.
எனவே வாக்காளர்களின் ஆணையை ஏற்று நாட்டையும் மக்களையும் தொடர்ந்து முன்னேற்றுவோம் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கும் நல்லிணக்கத்துக்கும் தேசிய முன்னணியின் பங்களிப்பை மக்கள் புரிந்திருப்பதை இந்த இடைத்தேர்தலின் அபார வெற்றி காட்டுவதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கருத்துரைத்துள்ளார். தமது பிரச்சாரங்களின் போது இந்திய சமூகம் இனியும் பொய் அரசியலை நம்பவில்லை என்பதும் தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம.இ.கா அவசியம் என்பதை உணர்ந்துள்ளதையும் தாம் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்வேளையில் இடைத்தேர்தல் தோல்வியை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதாக பெரிக்காத்தான் நேஷனல் (PN) தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பால் நாங்கள் மனம் தளரவில்லை; அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிக்காக தொடர்ந்து உழைப்போம் என, மக்கோத்தா தொகுதிக்கான PN தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி சொன்னார்.
நேற்றைய இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் Syed Hussein Syed Abdullah 27,995 வாக்குகளைப் பெற்று வாகை சூடினார்.
PN வேட்பாளர் Mohamad Haizan Jaafar 7,347 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியுற்றார்.
தேசிய முன்னணியின் கோட்டை என்பதால் வசதியான பெரும்பான்மையுடன் அது வெற்றிப் பெறும் என்பது முன்னரே கணிக்கப்பட்டாலும், இருபதாயிரம் வாக்குகள் பெரும்பான்மையில் வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.