
கோலாலாம்பூர், ஜூன்-30-உலகச் சந்தையில் விமான எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (Malaysia Airlines) தனது விமானக் கட்டணங்களை 20 முதல் 30 விழுக்காடு வரை உயர்த்தவுள்ளது.
எரிசக்தி சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த கட்டண உயர்வு நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், தங்களின் பிரீமியம் சேவைத் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், பயணிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கத் தங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி வருவதாக விமான நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இதனால், பொது மக்கள் மற்றும் சுற்றுப் பயணிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த புதிய கட்டண உயர்வு முழுமையாக அமுலுக்கு வரும் முன்பே முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



