
கோலாலம்பூர், செப்டம்பர்-3 – அரசுத் துறைகளில் Jakim எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டு துறை அதிகாரிகளை நியமிக்கும் உத்தேசப் பரிந்துரை தொடர்பில், இரு அமைச்சர்களுக்கு பிரதமர் சிறப்பு உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பைச் சந்தித்து, தவறான புரிதலைப் போக்குமாறு தேசிய ஒற்றுமை அமைச்சர் Aaron Ago Dagang மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Naím Mokhtar-ருக்கு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறுப்புக் கொடுத்துள்ளார்.
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்தார்.
இந்த Jakim அதிகாரிகள், அரசுத் துறைகளின் கொள்கை முடிவுகளில் சம்பந்தப்பட மாட்டார்கள் என ஃபாஹ்மி விளக்கினார்.
இது இன்றோ நேற்றோ வந்ததல்ல; 2007-ஆம் ஆண்டிலிருந்தே அது அமுலில் உள்ளது; எனினும் அதற்குப் பிறகு புதிதாக அப்பொறுப்புக்கு நியமிக்கப்படவில்லை என்றார் அவர்.
“என அமைச்சில் கூட Jakim அதிகாரிகள் இல்லையே” என ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
அரசுத் துறைகளில் Jakim அதிகாரிகளை நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறலாம் என, மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, மற்றும் தாவோ மதங்களின் ஆலோசக மன்றம் (MCCBCHST) நேற்று ஐயம் தெரிவித்தது.
அனைத்து மலேசியர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அது பாதிக்கலாம் என அம்மன்றம் விளக்கியது.
முன்னதாக இன்று காலை அது குறித்து கருத்துரைத்த அமைச்சர் Naím, கொள்கை முடிவில் Jakim அதிகாரிகள் சம்பந்தப்படமாட்டார்கள்; மாறாக அரசுத் துறைகளில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமே அவர்களின் பணி என விளக்கியிருந்தார்.