கோலாலம்பூர், டிச 24 – செந்தூலில் உள்ள நாகம்மா கோயில் இடமாற்ற விவகாரத்தை பொதுமக்கள் எவரும் அரசியல் விவகாரமாக்கக்கூடாது என பிரதமர்துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்திருக்கிறார்.
YTL நில மற்றும் மேம்பாட்டு பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குனர் டத்தோ ஹமிடா பக்கார்ருடன் நேற்று பேச்சு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என டாக்டர் ஜாலிஹா உறுதிப்படுத்தினார். இந்த பேச்சுக்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தன. இந்த விவகாரத்திற்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படுவதை தாம் உறுதிப்படுத்தவிருப்பதால் அனைத்து தரப்பினரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதோடு இதனை அரசியல் விவகாரமாக ஆக்காமல் கூட்டரசு பிரதேச மக்களுக்கிடையிலான அமைதி மற்றும் ஐக்கியம் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என தமது அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் ஜாலிஹா கேட்டுக்கொண்டார்.
டத்தோ ஹமிடா பக்கார்ருடன் நடைபெற்ற இந்த பேச்சுக்களில் தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கோலாலம்பூர் மாநகர் மன்ற பிரதிநிதி மற்றும் மலேசிய இந்து சங்கத்தின் பிரதிநிதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.