கோலாலம்பூர், நவம்பர் 29 – ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் ஈட்டும், 21 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு, இ-மடானி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல் நூறு ரிங்கிட் இ-வாலட் அல்லது மின்னியல் பணப்பை தொகையை, டிசம்பர் நான்காம் தேதி தொடங்கி பெற்றுக் கொள்ளலாம்.
100 கோடி ரிங்கிட்டை உட்படுத்திய அந்த மின்னியல் பணப்பை திட்டத்தின் வாயிலாக, ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த தொகையை, அடுத்தாண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி வரையில் பெற்றுக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
நான்கு இ-வாலட் நடத்துனர்கள் அந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எனினும், அவர்கள் யார் என்பதை பிரதமர் பெயர் குறிப்பிடவில்லை.
2024 வரவுச் செலவுத் திட்டத்தை, மேலவையில் இன்று இரண்டாவது முறையாக தாக்கல் செய்த போது, பிரதமர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.