புதுடில்லி, நவ 10- தனது கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் விதித்திருக்கும் மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல் முறையீடு செய்திருக்கிறது. கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறோம் என இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இன்னமும் தெரிவிக்கப்படாத காரணத்தினால் இந்திய கடற்படையின் 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இந்திய போர்க்கப்பல்களில் உயர்மட்ட அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். கட்டாரிலுள்ள Dahra Global Technologies and Consultancy Services வேலை செய்து கொண்டிருந்த அவர்கள் இஸ்ரேலுக்கு வேவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். அந்த 8 பேரும் கத்தார் நாட்டின் சக்திவாய்ந்த நீர் மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை இஸ்ரேலுடன் பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.