கூடலூர், ஜன 29 – கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பின் தொடரும் வாகனங்கள் சில சிக்கலான இடங்களில் சிக்கித் தவிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலா வந்த கர்நாடக மாநில இளைஞர்கள் கூகுள் மேபில் காட்டிய பாதையை நம்பி சென்றதில், செங்குத்தான படிக்கட்டுகளில் தங்களது காரை ஓட்டி சிக்கியுள்ளனர்.
சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காணப்பட்ட நிலையில், அந்த இளைஞர்கள் கூகுள் மேப்பில் மாற்றுப்பாதையை தேர்வு செய்துள்ளனர். மாற்றுப் பாதையில் பயணத்தை தொடர்ந்த நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த வாகனம் நடைபாதை படிக்கட்டில் சிக்கியுள்ளது.
வாகனம் படிக்கட்டில் செல்வதைக் கண்டு பதறிய ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு, செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர், உள்ளூர் மக்கள் உதவியுடன் சில மணி நேரங்கள் போராடி வாகனத்தை மீட்டுள்ளனர்.
சாலைக்குக் கொண்டுவரப்பட்டப் பின்னர், அவர்கள் நிம்மதியாக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.