கோலாலம்பூர், ஜனவரி 17 – தாய்லாந்து, பேங்கோக்கிலிருந்து, பூக்கெட் சென்ற எர் ஆசியாவின் ஏர்பஸ் A320 விமானத்தில் பாம்பு ஊர்ந்து செல்வதை காட்டும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அச்சம்பவம் இம்மாதம் 13-ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு மேல் இருக்கும் கேபினில் இருந்து பாம்பு ஒன்று வெளியேற முயலும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று, @wannabnailssalon எனும் டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனால், அந்த கேபினுக்கு கீழ் அமர்ந்திருந்த பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறிய வேளை ; விமான பணியாளர் ஒருவர், முதலில் காலி போத்தலை கொண்டு அந்த பாம்பை பிடிக்க முயல்கிறார்.
எனினும், அம்முயற்சி தோல்வி அடையவே, பின்னர் காலி பிலாஸ்டிக்கில் பையில் அப்பாம்பை பிடித்து, கேபின் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கிறார்.
விமானம், பூக்கெட் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியவுடன், அங்கிருந்த பணியாளர்களிடன் உதவியோடு அப்பாம்பு விமானத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது.
அந்த காணொளியை இதுவரை 34 லட்சம் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; பலர் அப்பாம்பு எப்படி விமான நிலைய சோதனைகளை தாண்டி விமானத்திற்குள் கொண்டு வரப்பட்டது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“இப்பொழுது பாம்புகள் உட்பட அனைவரும் பறக்கலாம்” எனவும் சிலர் கேலியாக பதிவிட்டுள்ளனர்.