
கோலாலம்பூர், ஜூன் 4 – நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவனேசன் தெரிவித்துள்ள கருத்து, இந்து சமய நடவடிக்கைக்கும் ஆன்மீக வழிபாட்டு முறைக்கும் பேரளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது கண்டனத்திற்கு உரியது என்று ம.இ.கா. தேசிய ஊடக ப் பிரிவுத் தலைவர் எல் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஆலயங்கள் முறையான சங்கப் பதிவக(ROS) பதிவைக் கொண்டிருக்கின்றனவா? ஆலய நிர்வாக குழுவினர் சீராக செயல்படுகின்றனரா? நிதி நிர்வாகமும் கணக்கு அறிக்கையும் சரியாக இருக்கிறதா போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு அரசாங்க நிதி வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இதைவிடுத்து, உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமற்றது.
நாடெங்கிலும் மேம்பாட்டுத் திட்டங்களும் உருமாற்ற நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆலயங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
காலம் காலமாக அந்தந்த இடத்தில் தோன்றி இந்து சமய மக்களுக்கு சமய – ஆன்மீகப் பணியை ஆற்றிவரும் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள், புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு சுற்றுவட்டார மக்களுக்கு சமய சேவையுடன் திருமுறை பயிற்றுவித்தல், வெள்ளிக்கிழமையை சமய சொற்பொழிவு, ஏழைக் குடும்ப மாணவர்களுக்கு கல்விசார் உதவி செய்தல் என்றெல்லாம் சமுதாயப் பணியையும் சேர்த்து ஆற்றி வருகின்றன.
ஒரு சில வழிபாட்டுத்தலங்களில் பதிவு பெற்றுள்ள உறுப்பினர்கள் வேறு இடங்களுக்கு மாறி சென்றுள்ள நிலையில் அவர்களின் உறுப்பியம் தொடர்ந்து இடம்பெறாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.
எனவே, இத்தகைய கருத்தை சிவனேசன் உடனே மீட்டுக் கொள்ள வேண்டும் என சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு மாநில அளவில் தெரிவிக்கப்பட்ட முடிவாக இருந்தாலும் நாடளவில் இது பிரதிபலிக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.