
கோலாலம்பூர், ஜூன்-4 – இலக்கவியல் தரவுப் பகிர்வுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
சட்டம் 864 எனப்படும் 2025-ஆம் ஆண்டு தரவுப் பகிர்வு சட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததை அடுத்து இந்தக் கொள்கை வெளியிடப்படுகிறது.
தனி மனித தரவு என்பது இரகசியமாகவும், முறையாகவும் பாதுகாக்கப்பட வேண்டியது.
இதனை கருத்தில் கொண்டு, மக்களின் தரவுகளை நிர்வகிக்க தேசிய தரவுப் பகிர்வு ஆணையக் குழு அமைக்கப்பட்டது.
தனது தலைமையில் இயங்கும் இந்தக் குழுவில், நாட்டிலுள்ள முக்கிய அமைச்சுகளிலிருக்கும் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஆக அந்தந்த அமைச்சுகளின் தரவுகள் முறையாகவும், துல்லியமாகவும் இலகுவாகவும் கையாளப்பட இந்த தேசிய தரவு பகிர்வு ஆணைய குழு வழிகாட்டும் என கோபிந்த் கூறினார்.
அதிகாரப்பூர்வ தரவுகளை இலக்கவியல்மயமாக்குவதன் வழி, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவுப் பகிர்வு மற்றும் பகுப்பாய்வுகளை சுலபமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளலாம்.
இதன்வழி அரசாங்கச் சேவை தரத்தை மேம்படுத்தலாம் என்றார் அவர்.
2025-ஆம் ஆண்டுக்கான தேசிய தரவுப் பகிர்வு ஆணையக் கூட்டத்தின் தொடக்க உரையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இலக்கவியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் ஃபேபியன் பிகார், தேசிய தரவுப் பகிர்வு ஆணையத்தின் தலைவர் Ts. நிக் சல்பிஹா பிந்தி நிக் மாட் உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர்.