பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 12 – திரங்கானுவிலுள்ள, உல்லாச தங்கும் விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில், நீந்திக் கொண்டிருந்த குடும்பம் ஒன்றின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
திடீரென அவர்களை தேனீக்கள் கூட்டம் தாக்கத் தொடங்கியதே அதற்கு காரணம்.
அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் சிகிச்சை பெறும் புகைப்படங்களை, இஸ்மத்ஸ்யாஹிரா எனும் டிக் டொக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
முதலில் தனது பிள்ளையை தேனீ கொட்டத் தொடங்கியதாகவும், பின்னர் திடீரென அதிகமான தேனீக்கள் தங்களை சூழ்ந்து தாக்கத் தொடங்கியதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அங்கிருந்த நபர் ஒருவர் தங்களுக்கு உதவிக் கரம் நீட்டி காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேனீக்களால் கொட்டப்பட்டதில், மோசமான வலிக்கு இலக்கான அவரும், அவரது குடும்பத்தாரும் பின்னர் அருகிலுள்ள, சிகிச்சை மையம் ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதன் பின்னர், தங்கள் உடல் நலம் சீராக இருக்கும் போதும், அச்சம்பவம் ஏற்படுத்திய பதற்றத்தில் இருந்து மீளமுடியவில்லை என அப்பெண் பதிவிட்டுள்ளார்.