
புத்ராஜெயா, அக்டோபர்-16,
சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன.
SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya, SK Kampung Medan, SK Jalan Tanjung ஆகியவே அப்பள்ளிகளாகும்.
கூரைகள் பறந்து, வகுப்பறைகள் சேதமாகி, சில இடங்களில் கட்டடத்தின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டது.
பறந்த தகடுகள் மற்றும் பலகைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு அபாயத்தை உருவாக்கியதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளிகளில் உடனடி பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளது.
தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு ஏற்கனவே சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டு, சேதங்கள், செலவுத்திட்டம் மற்றும் காலஅளவை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இவ்வேளையில், கற்றல் – கற்பித்தல் தடையில்லாமல் தொடர சில வகுப்புகள் தற்காலிக அறைகள் அல்லது மாற்று இடங்களுக்கு மாற்றப்படும் வாய்ப்பும் உள்ளதாக KPM கூறியது.
இச்சம்பவத்தை அடுத்து பள்ளிகளின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யும் ஆய்வறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்படும்.
வானிலை மாற்றங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கையை உறுதிச் செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
நேற்று வைரலான வீடியோக்களில், காற்று சுழன்று சுழன்று அடித்தது, பெரிய சூறாவளி போன்றதொரு நிலையை நினைவுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.