
கோலாலம்பூர், ஜூன்-5 – மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் கல்வி அமைச்சு வெளிப்படையாக நடந்துக்கொள்வதோடு, இன வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும்.
எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் வழங்கப்படுகின்றது என்பதும் அறிவிக்கப்பட வேண்டும் என, DSK எனப்படும் Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், மேல்முறையீடு செய்து ஏராளமான இந்திய மாணவர்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.
ஆனால் , இதுவரை ஒரு அறிவிப்பும் இல்லை; இதனால் என்ன செய்வது? யாரைக் கேட்பது என பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இது தொடர்பு முறையில் அமைச்சின் பலவீனத்தை காட்டுவதாகக் குறிப்பிட்ட சிவகுமார், உடனடியாக இது சரிசெய்யப்பட வேண்டுமென்றார்.
SPM தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு, இன அடிப்படையில் அல்லாமல் மெட்ரிகுலேஷனில் வாய்ப்பு வழங்கப்படுமென பிரதமரே அறிவித்திருக்கிறார்.
ஆனால் நடப்பது வேறு மாதிரியாக உள்ளது என ஏமாற்றம் தெரிவித்த டத்தோ சிவகுமார், மக்கள் பிரதிநிதிகள் இவ்விஷயத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருவதை சாடினார்.
மெட்ரிகுலேஷன் சாதாரண விஷயமல்ல; நம் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தது.
மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாற்றத்திலும் கவலையிலிருக்கும் போதும் கூட மக்கள் பிரதிந்திகள் வாய் திறக்கவில்லை என்றால், வேறு எப்போது தான் குரல் கொடுக்கப் போகிறார்கள்?
அதிகாரம் கையிலிருக்கும் போதே, அதை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பயன்படுத்துவது பற்றி அவர்கள் சிந்திப்பது நல்லது என சிவகுமார் அறிக்கையொன்றில் வலியுறுத்தினார்.