கிள்ளான், டிச 5 – கம்போங் பெண்டாமாரில் உள்ள வாடகை வீடொன்றின் குளியலறையில் சிமெண்டினால் புதையுண்டிருந்த பெண் என்று நம்பப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரு அந்நிய நாட்டு ஆடவர்கள் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாகவும், பின்னர் அவ்வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் வேறு இரு ஆடவர்களுக்கு அவ்வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சுற்று வட்டார குடியிருப்பு மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவ்வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் தகவல் கூறியுள்ளனர்.
எனவே, புதியதாக வாடகைக்கு வந்தவர்களை அவ்வீட்டிலிருந்து வெளியேற்றி போலிஸ் புகார் அளித்துள்ளார் அந்த உரிமையாளர். இரவு 11.39 மணியளவில் கிடைத்த புகாருக்கு பின், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பரிசோதித்தபோது அவ்வீட்டின் குளியலறையில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்க்ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.