
பூச்சோங், மே-8 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் மாஸ், கோய் பிரிமா அடுக்குமாடி குடியிருப்பு எதிர்நோக்கி வரும் திடீர் வெள்ளப் பிரச்னைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குவாலா லங்காட் கட்டட ஆணையர், குவாலா லங்காட் வடிகால் நீர்பாசனத் துறை, கோய் பிரிமியா மேம்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரத் தரப்புடன், தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக, அடுக்குமாடி மேலாண்மை அமைப்பான JMB கூறியுள்ளது.
திடீர் வெள்ள விஷயத்தில் நிர்வாகம் எதுவுமே செய்யாமல் கை விரித்து விட்டதாகக் கூறப்படுவது உண்மையில்லை என, அதன் செயலாளர் சுனிதா ருத்ரம் தெளிவுப்படுத்தினார்.
திடீர் வெள்ளம் குறித்து குடியிருப்பாளர்கள் சிலரின் அதிருப்தி மற்றும் குற்றச்சாட்டுகளைத் மறுக்கும் விதமாக, இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அக்கட்டுரை ஒருசார்பாக இருந்ததாக் குறிப்பிட்ட சுனிதா, எடுக்கப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு முயற்சிகளை அது புறக்கணித்திருப்பதாகத் தெரிவித்தார்.
கோய் பிரிமா கட்டுமானத்துக்கு அங்கீகாரம் கிடைப்பதற்குள் முன் அதாவது 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அப்பகுதியில் வெள்ளம் இல்லை;
இந்நிலையில் 2021-ல் ஏற்பட்ட வெள்ளம் வரலாறு காணாதது; இவ்வாண்டு ஏப்ரலில் ஏற்பட்ட வெள்ளமும் வழக்கத்திற்கு மாறானது.
என்ற போதிலும், அதிகாரிகளுடன் இணைந்து, கால்வாய் சுத்தம், கட்டமைப்பு ஆய்வுகள், மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தகவல் பகிர்வுகள் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த நிர்வாகத்திலிருந்து JMB முற்றிலும் தனியாக செயல்படுகிறது; அதோடு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் சொத்துகளின் மதிப்பையும் பாதுகாக்க உறுதியாகச் செயல்படுவதாகவும் சுனிதா தெரிவித்தார்.
யாரோ சில குடியிருப்பாளர்கள் கூறுவதெல்லாம், உண்மை நிலவரத்தைப் பிரதிபலித்து விடாது; பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் எடுத்து வரும் முயற்சி தெரியும் என அவர் கூறினார்.