
தெலுக் இந்தான், செப்டம்பர்-24 – பேராக், தெலுக் இந்தானில் 7 வயது சிறுவன் ஒருவன், சுமார் 2 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்தான்.
இன்று அதிகாலை அவனது சடலம் மீட்கப்பட்டது.
இத்துயரச் சம்பவம் Jalan Chenderong Balai Labu Kubong எனுமிடத்தில் நிகழ்ந்தது.
சிறுவன் நேற்று மாலை 5 மணிக்கு மேல் காணாமல் போனதை அடுத்து குடும்பத்தார் பதறிப் போயினர்.
கிராம மக்களுடன் சேர்ந்து முதலில் தேடினாலும் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் நடவடிக்கையில் இறங்கி, சிறுவன் விழுந்ததாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் கால்வாயின் அடியில் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
சிறுவனின் உடல் மேல் விசாரணைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.