
கோலாலம்பூர், ஏப்ரல்-21- அரசாங்க நிறுவனங்களும், அரசுத் துறைகளும் இந்து ஆலயங்களை ‘kuil haram’ அல்லது சட்டவிரோதக் கோயில்கள் எனக் குறிப்பிடக் கூடாது.
அவ்வாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட வேண்டுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமருக்கு எழுதிய கடிதமொன்றில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
பேராக், தைப்பிங் மருத்துவமனை அண்மையில் வெளியிட்ட கடிதத்தைச் சுட்டிக் காட்டி, சரவணன் அவ்வாறு வலியுறுத்தினார்.
தைப்பிங் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோயில் குறித்து எழுந்துள்ள புகார் தொடர்பான அக்கடித்ததில், மருத்துவமனை நிர்வாகம் ‘kuil haram’ எனக் குறிப்பிட்டுள்ளது.
அதனைச் சாடிய சரவணன், இந்நாட்டில் சட்டவிரோத கோயில்கள் என எதுவுமில்லை என்றார்.
1965-ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பிருந்தே கோவில்கள் கட்டப்பட்டு வழிபடப்படுகின்றன.
வெள்ளையர் மற்றும் ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் அதிகமாக தோட்டப்புறங்களில் கட்டப்பட்ட ஆலயங்கள், காலப் போக்கில் நகர்புற வளர்ச்சியின் காரணமாக வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன.
அதற்காக அவற்றை ‘kuil haram’ என பொத்தாம் பொதுவாக அழைப்பதெல்லாம் கூடாது; இது இந்துக்களின் மனதைக் மேலும் மேலும் காயப்படுத்துமென, டத்தோ ஸ்ரீ சரவணனன் சுட்டிக் காட்டினார்.
எனவே, இவ்விஷயத்தை சீரிய முறையில் பரிசீலித்து, ‘kuil haram’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என அரசு நிறுவனங்களுக்கும் துறைகளுக்கும் பிரதமர் உடனடியாக உத்தரவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.