ஜெராண்டுட், ஏப்ரல்-14 – பஹாங், ஜெராண்டுட்டில் வீட்டொன்றில் ஏற்பட்ட தீயில் 15 பூனைகளும் 10 பறவைகளும் பரிதாபமாக மடிந்தன.
டமாக், கம்போங் செங்குவாக்கில் உள்ள வீட்டொன்றில் சனிக்கிழமை அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் அவ்வீடே முற்றாக எரிந்துப் போனது.
சம்பவத்தின் போது வீட்டில் தனியாக இருந்த Faridah Majid, அதிகாலை தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த சமயம், வீட்டின் தனியறையில் வைக்கப்பட்டிருந்த வளர்ப்புப் பூனைகள் வினோத சத்தத்தை எழுப்பியிருப்பதைக் கேட்டார்.
உடனே சென்றுப் பார்த்த போது, அந்த அறையின் மின் இணைப்புக் கம்பியில் இருந்து புகை வருவதை அவர் கண்டார்.
அதோடு சுவரில் உள்ள Plug-கில் இருந்து தீப்பொறி கிளம்பி, தீ பிடித்துக் கொண்டதாக ஃபரிடா சொன்னார்.
வீட்டின் சுவர் மரக்கட்டையால் செய்யப்பட்டதென்பதால் கண்ணிமைக்கும் நேரத்தில் கரும்புகையுடன் தீப்பரவியதாக அவர் கூறினார்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியில் ஓடி, உதவிக் கோரி கூச்சலிட்டுள்ளார்.
தீயணைப்பு மீட்புத் துறை வந்து தீயை அணைத்து முடித்த போது, தான் ஆசையாக வளர்த்து வந்த 15 பூனைகளும் 10 பறவைகளும் மடிந்துப் போயிருந்ததாக Faridah வேதனையுடன் கூறினார்.
தீ ஏற்பட்டதற்கான உண்மைக் காரணம் கண்டறியப்பட்டு வரும் வேளை, சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறை கூறியது.