பண்டார் பாரு, ஜனவரி 1 – கெடாவில், நேற்றிரவு 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
பண்டார் பஹாரு சதுக்கத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் அச்சம்பவம் குறித்து, பின்னிரவு மணி 12.01 வாக்கில் புகார் கிடைத்ததை, மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடென்டன் அஸ்மி மொக்தார் உறுதிப்படுத்தினார்.
பார்வையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், மண்ணில் வைத்து பட்டாசு வெடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாக அஸ்மி சொன்னார்.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அதே சமயம், அங்கு பட்டாசுகளை வெடிக்க, ஏற்பாட்டாளர்கள் பண்டார் பஹாரு போலீசாரிடமிருந்து அனுமதி எதையும் பெறவில்லை என்பதையும் அஸ்மி உறுதிப்படுத்தினார்.
அதனால், 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ், அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
முன்னதாக, தரையில் பட்டாசு கொளுத்தப்பட்டதும், அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் பதற்றத்தோடு ஓடும் காட்சிகள் அடங்கிய 15 வினாடி காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.