
ஷா ஆலாம், மே-8-இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை அரச குடும்ப உறுப்பினர்களைப் போல நடித்து உருவாக்கப்பட்ட சுமார் 16 ஆயிரம் போலி சமூக ஊடக கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, நாடு முழுவதும் 26 அரச குடும்ப உறுப்பினர்களை தொடர்புபடுத்தி மொத்தம் 15 ஆயிரத்து 296 போலி கணக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.
அதில் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் அவரின் துணைவியார் Tengku Permaisuri Norashikin ஆகியோரின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
சமூக ஊடக தளங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதில் அவற்றில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்நிலையில், நேற்று சிலாங்கூர் சுல்தானை சந்தித்தபோது, இணைய துஷ்பிரயோகம், போலி தகவல்கள் மற்றும் 3R தொடர்பான உணர்வுப்பூர்வ உள்ளடக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஃபாஹ்மி கூறினார்.
சமூக ஊடக தவறான பயன்பாட்டை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், e-KYC போன்ற டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பு முறைகள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.



