கோலாலம்பூர், பிப் 13 – சந்தையில் விற்பனை செய்யப்படும் தேனில் 90 விழுக்காடு போலியாகும் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் சுல்கிப்லி முஸ்தபா கூறியிருந்தது குறித்து உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு ஆராயும் என அதன் அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி தெரிவித்திருக்கிறார். மலேசிய சந்தையில் பெரிய அளவிலான போலி தேன் தொழில்துறைக்கு பெரும் மிரட்டலாக இருப்பதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறையைச் சேர்ந்த சுல்கிப்லி முஸ்தபா தெரிவித்ததாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் செய்தி வெளியிட்டிருந்தது. உண்மையான தேனை கண்டுப்பிடிப்பதற்காக ஆய்வுக்கூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அர்மிஸான் கேட்டுக்கொண்டார்.
போலி தேன் குறித்து முதல் முறையாக தாம் கேள்விப்படுவதாகவும் அதுவும் சந்தையில் உள்ள தேன்களில் 90 விழுக்காடு போலியானவை என்ற தகவல் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். மேல் நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சு, விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு போன்ற அரசாங்க நிறுவனங்களிடமிருந்து கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.