கோலாலம்பூர், பிப் 3 – முன்னாள் பிரதமர் நஜீப்பின் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகையை குறைத்திருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவு மற்றும் நடப்பு அரசியல் விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று காலை 11 மணியளவில் அம்னோ சிறப்பு உச்சமன்ற கூட்டத்தை நடத்தவிருக்கிறது. இதன் காரணமாக இன்று காலையில் நடைபெறவிருந்த பூமிபுத்ரா பொருளாதார மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். அம்னோ உதவித் தலைவர் ஜோஹாரி கானி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் அம்னோ டிவிசன்களின் 2,000 தலைவர்கள் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
நஜிப்பின் சிறை தண்டனை குறைக்கப்பட்டது மற்றும் நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்து இன்று காலையில் நடைபெறும் உச்சமன்ற கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என ஸாஹிட் கூறினார். இதற்கு முன்னர் நஜீப்பின் 12 ஆண்டு கால சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும் அவருக்கான அபராதத் தொகை 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளதாக மன்னிப்பு வாரியம் தெரிவித்திருந்தது. “SRC International” நிறுவனத்திற்கு சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் முறைகேட்டில் சம்பந்தப்பட்டது மற்றும் அதிகார மீறில் தொடர்பான குற்றத்திற்காக நஜீப் தற்போது சிறையில் இருந்து வருகிறார்.