கோலாலம்பூர், பிப்ரவரி 16 – புக்கிட் பிந்தாங்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், அனைத்துலக இணைய மோசடி கும்பலொன்று முறியடிக்கப்பட்டது.
பிப்ரவரி ஆறாம் தேதி நடத்தப்பட்ட அச்சோதனையில் அக்கும்பலைச் சேர்ந்த 49 பேர் கூண்டாக சிக்கியதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமட் யூசோஃப் தெரிவித்தார். கைதானவர்களில் 47 பேர் வெளிநாட்டவர்கள்; இருவர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
Forex முதலீட்டு திட்டம் என்ற பெயரில் ஆறு மாதங்களாக அக்கும்பல் செயல்பட்டு வந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. 47 கணினிகள், 49 கைப்பேசிகள், 6 மடிக்கணினிகள், இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
பிரான்ஸ், உக்ரேய்ன், பிரிட்டன், சுவிட்ர்சலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறி வைத்து, இங்கிருந்தே அக்கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.
டெலிகிராமில் தோராயமாக குறுஞ்செய்தி அனுப்பி முதலீட்டுத் திட்டத்தின் லிங்க் இணைப்பைப் பகிர்ந்து, நயமாகப் பேசி ‘ஏமாளிகளை’ சிக்க வைப்பதில் அவர்கள் கில்லாடிகள் என டத்தோ ஸ்ரீ ரம்லி சொன்னார்.
முதலீட்டில் அதிக இலாபம் பார்க்கலாம் என்றெண்ணி அவர்களும் அந்த மோசடி வலையில் சிக்கி விடுவதாக ரம்லி மேலும் கூறினார்.