ஷா அலாம், ஜன 6 – ஷா அலாம், கம்போங் ஜாலான் கெபுனில் நேற்று மாலை மணி 5 மணியளவில் மறுசுழற்சி தொழிற்சாலையில் சோதனை செய்த போலீசார் நான்கு பெண்கள் உட்பட 100 வெளிநாட்டினரை கைது செய்தனர். சிலாங்கூர் தொழிலாளர் துறை மற்றும் சுற்றுப்புற சூழல்துறையின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 60 வயதுடைய ஆடவர் உட்பட அவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குடிநுழைவுத்துறை கடத்தல் துடைத்தொழிப்பு பிரிவின் முதன்மை துணை இயக்குனர் SAC சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
கைதான உள்நாட்டு ஆடவர் அந்த நிலத்தின் உரிமையாளர் என கூறப்பட்டது. மின்னியல் உபரி பாகங்கள் போன்ற மறுசுழற்சி தொழிற்சாலைக்கு சீன பிரஜைகளுக்காக அந்த நபர் நிலத்தை வாடகைக்கு விட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் சீனாவைச் சேர்ந்த 19 பிரஜைகள், 10 மியன்மார் பிரஜைகள், 61 வங்காளதேசிகள், இரு நேப்பாளிகள் மற்றும் 8 கம்போடியர்களும் அடங்குவர். ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த தொழிற்சாலை வர்த்தக அனுமதியை கொண்டிருக்கவில்லையென தெரியவந்துள்ளது.