ஜெம்போல், நவ 2 – சிரம்பான் , ஜாலான் பஹாவ் – ஜுவாசேவில் 1 ஆவது கிலோமீட்டரில் 15 வயது பையன் ஓட்டிச் சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அக்காரை ஓட்டுவதற்கு அனுமதித்த அந்த பையனின் தந்தைக்கு போலீசார் குற்றப்பதிவு வழங்கினர். வயது குறைந்தவரை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்ததற்காக 1987 அம்ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 39 ஆவது விதி உட்பிரிவு ( 5) இன் கீழ் இந்த குற்றப்பதிவு வழங்கப்பட்தாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர்
சுப்ரிடெண்டன்ட் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
15 வயது பையன் தனியாக ஓட்டிச்சென்ற நிசான் அல்மேரா (Nissan Almeera) பஹாவ்வை நோக்கி ஜுவாசே சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இரவு மணி 10.14 அளவில் விபத்துக்குள்ளாதாக அவர் கூறினார். அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் கவிழ்வதற்கு முன் சாலையோரத்தில் இருந்த விளக்கு கம்பத்தில் மோதியது. அக்கார் கடுமையாக சேதம் அடைந்தபோதிலும் கார் ஓட்டிய பையனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. லைசென்ஸ் இன்றி தங்களது பிள்ளைகள் கார் ஓட்டாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருப்பதாக ஹூ சாங் ஹூக் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினார்.